விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை

குன்னம் அருகே விஷம் குடித்து என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-24 19:51 GMT
குன்னம்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 28). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். திருமணமான இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், 5 மாதத்தில் குழந்தையும் உள்ளனர். கார்த்திகை தீப பண்டிகைக்காக ஊருக்கு வந்திருந்தனர். பின்னர் பத்மாவதி தனது பெற்றோரை பார்க்க கள்ளக்குறிச்சிக்கு சென்றார்.
விடுமுறை முடிந்த தமிழரசன் சென்னை செல்ல நேற்று முன்தினம் இரவு மனைவியை செல்போன் மூலம் அழைத்துள்ளார். அதற்கு பத்மாவதி குழந்தைக்கு 10 மாதத்தில் தடுப்பூசி போட்டு விட்டு அதன் பின்னர் சென்னைக்கு வருகிறேன் என்று கூறி வர மறுத்ததாக கூறப்படுகிறது.
விஷம் குடித்து தற்கொலை
பின்னர், தமிழரசன் மதுபோதையில் விஷத்தை குடித்து விட்டு மனைவிக்கு போன் செய்து கூறியுள்ளார். அவர், தனது கொழுந்தனாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் உறவினர்கள் தேடி பார்த்த போது குன்னம் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் ஏரிக்கரையோரம் தமிழரசன் மயங்கி கிடந்தது தெரிய வந்தது. பின்னர் அவரை உறவினர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழரசன் உயிரிழந்தார். இதுகுறித்து குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்