ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால் காவிரி அற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

Update: 2021-11-25 04:57 GMT
பென்னாகரம்:
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்ததால், காவிரி அற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.
நீர்வரத்து குறைந்தது
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 73 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.  இதையடுத்து காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. அதன்படி நேற்று முன்தினம் வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனிடையே நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 24 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.
பரிசல் இயக்க அனுமதி
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைந்ததால் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. மேலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து கோத்திக்கல், சின்னாறு பரிசல் துறையில் இருந்து மணல் திட்டு வரை உற்சாகமாக பரிசல் சவாரி செய்தனர். 
இதையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிர ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்