சுற்றுலா தலங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

ஊட்டியில் படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மேலும் முகக்கவசம் அணிவதை தொடர சுகாதாரத்துறையினர் அறிவுரை வழங்கினர்.

Update: 2021-11-25 13:51 GMT
ஊட்டி

ஊட்டியில் படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மேலும் முகக்கவசம் அணிவதை தொடர சுகாதாரத்துறையினர் அறிவுரை வழங்கினர். 

சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் 11-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் ஆகிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் உள்பட மொத்தம் 241 நிலையான மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

இந்த மையங்களில் 2-வது டோஸ் செலுத்தாத நபர்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பின்னர் செலுத்த வந்தனர். ஆன்லைனில் அவர்களது செல்போன் எண் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. மையங்களுக்கு வர முடியாதவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து செலுத்துவதற்காக பணியாளர்கள் வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தினர்.

சுற்றுலா தலங்களில் தடுப்பூசி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா முன்பு போலீஸ் உதவி மையத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல் ஊட்டி படகு இல்லம் போன்ற சுற்றுலா தலங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது. மேலும் நடமாடும் 20 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டது. மொத்தம் 261 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் 1044 பணியாளர்கள் ஈடுபட்டனர். 

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 17 ஆயிரத்து 597 பேர் முதல் டோஸ் செலுத்தி உள்ளனர். 4 லட்சத்து 22 ஆயிரத்து 82 பேர் 2-வது போட்டுக்கொண்டனர். மொத்தம் 9 லட்சத்து 39 ஆயிரத்து 679 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 

முகக்கவசம் அணிய வேண்டும்

18 வயதுக்கு மேல் அனைவருக்கும் விரைவில் 2-வது டோஸ் செலுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் தொற்று பரவாமல் தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் பாதுகாக்க முடியும்.

நீலகிரியில் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளது. இதனால் பொது இடங்களில் முகக்கவசம் அணியும் பழக்கம் குறைந்து வருகிறது. இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே முறையாக முகக்கவசம் அணிவதை தொடர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்