சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது
சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது
பல்லடம்
பல்லடம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
சிறுமி
பல்லடம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியின் தாயார் இறந்து போனதால் அவரது உறவினர் வீட்டில் வளர்ந்து வந்தார். அங்கிருந்து பள்ளிக்குச் சென்று வந்தார். அந்த சிறுமி கடந்த 2 ஆண்டாக பள்ளிக்கு செல்வதில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்ல முயன்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்ல சிறுமி மறுத்துவிட்டார்.
எதற்காக ஆஸ்பத்திரிக்கு வர மறுக்கிறாய் என்று உறவினர்கள் அந்த சிறுமியிடம் கேட்டனர். அப்போது அவர்களது வீடு அருகே வசிக்கும் சுகுமார் வயது 24 என்ற பனியன் நிறுவன தொழிலாளி தன்னை காதலித்ததாகவும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறியுள்ளார் இதையடுத்து பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
போச்சோவில் கைது
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சுகுமார் சிறுமியை திருமணம் செய்து பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறுமியை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அந்த சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் சுகுமாரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.