மின்சாரம் தாக்கி மாணவன் உள்பட 2 பேர் பலி

பெண்ணாடம், பண்ருட்டியில் மின்சாரம் தாக்கி மாணவன் உள்பட 2 பேர் பலியாகினர்.

Update: 2021-11-29 19:53 GMT
பெண்ணாடம், 

பெண்ணாடம் அருகே வெண்கரும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் நகுலன் (வயது 14), 9-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று அப்பகுதியை சேர்ந்த தனது நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்தான். இதில் அதே பகுதியில் உள்ள ஒரு கூரை வீட்டின் சந்தில் நகுலன் சென்றான். அப்போது அங்கிருந்த எர்த் கம்பியை அவன் பிடித்ததாக தெரிகிறது. இதில் எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே அவன் பரிதாபமாக இறந்தான். இது குறித்த தகவலின் பேரில் பெண்ணாடம் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நகுலனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ருட்டி

பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பத்தை சேர்ந்தவர் சிவப்பிரகாசம். இவருடைய மகள் ஆதித்யா(வயது 25). இவர் முத்தாண்டிக்குப்பம் கடைவீதியில் உள்ள ஒரு தனியார் ரத்த பரிசோதனை கூடத்தில் உதவியாளராக பயிற்சி பெற்று வருகிறார். நேற்று காலை 8.30 மணியளவில் ஆதித்யா, ரத்த பரிசோதனை கூடத்துக்கு வந்தார். அப்போது தான் கொண்டு வந்திருந்த குடையை மடக்கி அருகில் இருந்த கம்பி வேலியில் மாட்டினார். அப்போது அப்பகுதியில் இடி-மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக ஏற்கனவே கம்பி வேலியில் மின்சாரம் பாய்ந்து இருந்த நிலையில் எதிர்பாராத நிலையில் ஆதித்யா மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆதித்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்