மாணவன் கொலை வழக்கில் 13 வயது சிறுவன் கைது

சிவகாசியில் மாணவன் கொலை வழக்கு தொடர்பாக 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-11-29 20:16 GMT
சிவகாசி, 
சிவகாசியில் மாணவன் கொலை வழக்கு தொடர்பாக 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மாணவன் மாயம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சேசுதாஸ் (வயது 39). இவருடைய மகன் மைக்கேல்அஜய் (9). அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். 
இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி காலையில் வெளியே சென்ற அவன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவனை பல இடங்களில் தேடினர். ஆனால் அவனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்  சேசுதாஸ் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
பிணம் மீட்பு
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு குட்டையில் இருந்து  மைக்கேல்அஜய் உடல் மீட்கப்பட்டது. குளிக்க சென்ற மாணவன் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக முதலில் கூறப்பட்டது. 
பின்னர் மைக்கேல்அஜயுடன் சென்ற அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அந்த சிறுவன் தனக்கு ஏதும் தெரியாது என்று கூறி இருக்கிறான்.
 பின்னர் போலீசார் சம்பவம் நடந்த குட்டைக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆராய்ந்தனர். அதில் மைக்கேல் அஜயுடன், 13 வயது சிறுவன் நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன. 
கைது
இந்தநிலையில் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பாபுபிரசாந்த் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அந்த 13 வயது சிறுவனிடம் விசாரணை நடத்திய போதுதான், அந்த 5-ம் வகுப்பு மாணவன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 
இதை தொடர்ந்து சிவகாசி டவுன் போலீசார், ெகாலை வழக்கில் 13 வயது சிறுவனை கைது செய்தனர். இது சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்