கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நரசிங்கம்பட்டி ஆதிபராசக்தி நகர் அபிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான விவசாயிகள் பசுமாடுகளை வளர்த்து வருகின்றனர். தற்போது மழைக்காலத்தில், மாடுகள் நடக்க முடியாமல் கால்கள் மற்றும் வாய், நாக்கு பகுதியில் புண் ஏற்பட்டு சரியாக இரை சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றன. 10 லிட்டர் பால் கொடுக்கும் மாடுகள் தற்போது ஒரு லிட்டர் பால் தான் கொடுக்கிறது.
மேலும் பல பகுதிகளில் இந்தநோய் தாக்கிய மாடுகள் இறந்து வருகின்றன. கமுதி, அபிராமம், நரசிங்கம்பட்டி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது மாடுகளுக்கு பாதித்துள்ள காணை எனப்படும் கோமாரியால் பால் வரத்து குறைந்து ஏராளமான மாடுகள் இறந்து வருகின்றன. இதனால் மாடு வளர்ப்பவர்கள் மிகவும் நஷ்டமடைந்தும், வேதனை அடைந்தும் வருகின்றனர். நரசிங்கம்பட்டியில் பாண்டி என்பவருக்கு சொந்தமான 15-க்கும் மேற்பட்ட மாடுகள் கோமாரி நோய் தாக்கப்பட்டு இறந்துள்ளதாக தெரிகிறது.எனவே கால்நடை மருத்துவ முகாம் நடத்தி மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும், மேலும் இறந்த மாட்டின் உரிமையாளர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.