இறந்தவரின் உடலை ஆற்றில் தூக்கி செல்லும் பொதுமக்கள்

நரிக்குடி அருகே பாலம் இல்லாததால் இறந்தவரின் உடலை ஆற்றில் தூக்கி செல்லக்கூடிய நிலை உள்ளது.

Update: 2021-12-02 18:34 GMT
காரியாபட்டி, 
நரிக்குடி அருகே பாலம் இல்லாததால் இறந்தவரின் உடலை ஆற்றில் தூக்கி செல்லக்கூடிய நிலை உள்ளது. 
நீர்வரத்து அதிகரிப்பு 
 நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட உலக்குடி கிராமத்தில் வைகை அணை திறப்பின் காரணமாக உலக்குடி கிருதுமால் நதியில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்த நதியை கடந்து செல்ல பாலம் வசதி இல்லை. இதனால் தண்ணீர் வரும் போது அந்த பகுதி மக்கள் தண்ணீரில் நடந்து செல்லும் நிலை உள்ளது. 
இந்த நிலையில் உலக்குடி ஊராட்சிக்குட்பட்ட திருமாணிக்கனேந்தல் கிராமத்தில் இறந்த ஒருவரை  அடக்கம் செய்வதற்காக உலக்குடி சுடுகாட்டிற்கு கிருதுமால் நதியின் ஆற்றை கடந்து கொண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. உலக்குடி கிருதுமால் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் இறந்தவரின் உடலை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து கொண்டு மிகவும் சிரமத்துடன் எடுத்து சென்றனர். 
மேம்பாலம் 
இதுகுறித்து திருமாணிக்கனேந்தல் கிராம மக்கள் கூறுகையில், தினமும் உலக்குடி கிராமத்திற்கு வந்து தான் பொருட்கள் வாங்கி செல்கிறோம். மழைக்காலத்திலும், அணை திறக்கப்படும் சமயத்தில் கிருதுமால் நதியில் வெள்ளம் வரும் நிலையிலும் எங்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் பாதிப்படைகிறது.
தண்ணீரில் மிகவும் சிரமத்துடன் கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழக அரசு கிருதுமால் நதியின் குறுக்கே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்