கல்லூரி மாணவி மானபங்கம்: வட மாநில காவலாளிக்கு 10 ஆண்டு சிறை

கல்லூரி மாணவியை மானபங்கப்படுத்திய வட மாநில காவலாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

Update: 2021-12-04 08:16 GMT
சென்னை, 

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் நிர்பய்குமார் (வயது 26). இவர், சென்னை சென்னை அடையாறில் உள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு இவர் அடையாறு கஸ்தூரிபாநகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டுக்குள் புகுந்து அங்கு தனியாக இருந்த கல்லூரி மாணவியை தாக்கி அவரை மானபங்கம் செய்துள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். இதையடுத்து பொதுமக்கள் வாலிபர் நிர்பய்குமாரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து நிர்பய்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் நீதிபதி டி.எச்.முகமது பாரூக் முன்னிலையில் நடந்தது. போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பி.ஆர்த்தி ஆஜராகி வாதாடினார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, நிர்பய்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு அபராத தொகையில் இருந்து ரூ.10 ஆயிரத்தை இழப்பீடாக வழங்கவும், கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்