டிரான்ஸ்பார்மர் மீது சரக்கு வேன் மோதியதில் 6 பேர் படுகாயம்

தண்டராம்பட்டு அருகே டிரான்ஸ்பார்மர் மீது சரக்கு வேன் மோதியதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2021-12-09 17:55 GMT
தண்டராம்பட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த திருவடத்தனூர் கிராமத்தை் சேர்ந்தவர் ஷாருக் (வயது 28), டிரைவர். 

இவர் நேற்று காலை திருவடத்தனூர் கிராமத்தில் இருந்து தானிப்பாடியில் உள்ள தனது உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு மளிகை பொருட்களை சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு சென்றார்.

தானிப்பாடி முருகர் கோவில் பகுதியில் சென்ற போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்ற வேன் நிலத்தில் இருந்த டிரான்ஸ்பார்மர் மீது மோதியது.

இந்த விபத்தில் சரக்கு வேனில் இருந்த தவ்பிக் (18), பஷீர் (20), அக்பர்பாஷா (13), இமாத் (14), அகமத் (14) ஷாருக் ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் சிக்கியவர்களின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக டிரைவர் ஷாருக் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கும், இமாத் சென்னையில் உள்ள மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்