கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

ராமநகர் அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2021-12-13 20:15 GMT
ராமநகர்: ராமநகர் அருகே கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். 

கணவரை பிரிந்த பெண்

ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா குதூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தாசேகவுடன தொட்டி கிராமத்தை சேர்ந்தவா் புஷ்பலதா (வயது 25). இவருக்கு திருமணமாகி விட்டது. புஷ்பலதாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. 

இதன் காரணமாக தனது கணவருடன் வாழ பிடிக்காமல் புஷ்பலதா பிரிந்து விட்டார். அதன்பிறகு, தாசேகவுடன தொட்டியில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

கள்ளக்காதல்

மாகடி டவுன் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (24). இவர், தாசேகவுடன தொட்டியில் உள்ள ஒரு கோழி இறைச்சிக்கடையில் வேலை பார்த்து வந்தாா். அந்த கோழிக்கடையின் அருகே தான் புஷ்பலதா வசித்து வந்தார். இதனால் மோகன்குமாருக்கும், புஷ்பலதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. 
அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் புஷ்பலதாவுக்கு சொந்தமான தோட்டத்திற்கு மோகன்குமார் சென்றிருந்தாா். அங்கு வைத்து 2 பேருக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. 

பின்னர் வீட்டுக்கு செல்வதாக கூறிய புஷ்பலதா, தோட்டத்தில் உள்ள மாமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதை பார்த்து மோகன்குமார் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அதே மரத்தில் மோகன்குமாரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

போலீஸ் விசாரணை

இதை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் குதூர் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர். அப்போது கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக 2 பேருக்கும் இடையே உண்டான தகராறில் புஷ்பலதா, மோகன்குமார் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து குதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்