வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-12-16 00:02 GMT
தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த புதுபெருங்களத்தூர் சூரத் அம்மன் கோவில் முதல் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருபவர் பரமேஸ்வரன் (வயது 62). இவருடைய மகன் திருமணத்துக்காக கடந்த 8-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினர் அனைவரும் திண்டுக்கல் சென்று விட்டனர்.

இந்தநிலையில் பரமேஸ்வரன் வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அக்கம் பக்கத்தினர், இதுபற்றி அவருக்கு செல்போனில் தகவல் கொடுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், திண்டுக்கல்லில இருந்து அவசர அவசரமாக தாம்பரம் புறப்பட்டு வந்தனர்.

25 பவுன் நகை திருட்டு

அப்போது அவர்களது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்படாமல் சாவி மூலமாக திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த 25 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று இருப்பது தெரிந்தது.

இதுகுறித்து பரமேஸ்வரன் அளித்த புகாரின்பேரில் பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்