தி.மு.க. அரசை கண்டித்து நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தி.மு.க. அரசை கண்டித்து நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-12-17 16:18 GMT
வெளிப்பாளையம்:
தி.மு.க. அரசை கண்டித்து நாகையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அவுரி திடலில் தி.மு.க அரசை கண்டித்து மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ஆசைமணி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சட்டசபை தேர்தலில் தி.மு.க.வினர் மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்துள்ளனர். மத்திய அரசு பெட்ரோல், டீசலுக்கான வாட் வரியை குறைந்துள்ளபோதும், மாநில அரசு வரியை குறைக்கவில்லை.
நிவாரணம்
ரேஷன் கடைகளில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களாகியும் வழங்கப்படவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றனர். இப்போது நீட் தேர்வு எழுத பழகி கொள்ளவேண்டும் என்கின்றனர். பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரியை உடனடியாக குறைக்க வேண்டும், 
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500  வழங்கவேண்டும், பொதுமக்களின் நலனுக்காக திறக்கப்பட்ட அம்மா கிளிக்குகளை தி.மு.க அரசு மூடுவதை  கண்டிக்கிறோம். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்கவேண்டும், தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயபால், முன்னாள் எம்.எல்.ஏ. கோடிமாரி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நாகை நகர செயலாளர் தங்க.கதிரவன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்