காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தக்கலை அருகே காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-23 19:48 GMT
பத்மநாபபுரம், 
தக்கலை அருகே காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 
வாலிபர்
தக்கலை அருகே உள்ள திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் தாணுமூர்த்தி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பகவத் (வயது 20), டிப்ளமோ படித்துவிட்டு வேலை தேடி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். அவரை உறவினர்கள் தேற்றி வந்தனர். 
இந்தநிலையில் பகவத் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பகவத் பரிதாபமாக இறந்தார். 
காதல் தோல்வி
இதுகுறித்து தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பகவத் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தது தெரிய வந்தது. கடந்த சில நாட்களாக அந்த பெண், பகவத்திடம் பேசுவதை நிறுத்தி விட்டார். இதனால், மனமுடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்