ஓய்வுபெற்ற 8500 பணியாளர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க வேண்டும்
ஓய்வுபெற்ற 8500 பணியாளர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க வேண்டும்
ஊட்டி
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஓய்வுபெற்ற 8,500 பணியாளர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்று நிர்வாகிகள் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு மனுக்களை கொடுத்தனர்.
நீலகிரி போக்குவரத்து ஓய்வுபெற்ற பணியாளர்கள் சார்பில் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- 2016 ஆண்டு முதல் உயராமல் உள்ள அகவிலைபடி உயர்த்தி 76 மாதங்களுக்கான நிலுவை வையுடன் பண பலன் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டம் அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்கள் வாரிசுதாரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும்.
நிலுவைத்தொகை
தமிழகத்தில் 8,500 மேற்பட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் நீண்ட கால நிலுவையில் இருக்கும் பிரச்சனைகள் தீர்க்க நடவடிக்கை எடுப்பதோடு நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஊட்டி நொண்டிமேடு பகுதி சேர்ந்த பெண்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் நொண்டிமேடு பகுதி மக்கள் செல்லும் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்து வேலி போடப்பட்டு உள்ளது. இதுகுறித்து 3 ஆண்டு காலமாக மனு கொடுத்து வருகிறோம். எனவே நடைபாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்சை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.