ராமேசுவரம் மீனவர்கள் 43 பேருக்கு காவல் நீட்டிப்பு

இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 43 பேருக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அவர்களை 13-ந் தேதி வரை சிறையில் அடைக்க அந்நாட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2021-12-31 15:57 GMT
ராமேசுவரம்,
இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் மீனவர்கள் 43 பேருக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. அவர்களை 13-ந் தேதி வரை சிறையில் அடைக்க அந்நாட்டு கோர்ட்டு உத்தரவிட்டது.
43 மீனவர்கள் கைது
ராமேசுவரத்தில் இருந்து கடந்த 18-ந் தேதி 6 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 43 மீனவர்களை எல்லை தாண்டி சென்று மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
10 நாட்களுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேசுவரத்தை சேர்ந்த 43 மீனவர்கள் நேற்று ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். 
அப்போது நீதிபதி, 43 மீனவர்களையும் ஜனவரி 13-ந் தேதி வரை சிறையில் அடைக்கும்படி காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
குடும்பத்தினர் கவலை
இலங்கை சிறையில் தவிக்கும் ராமேசுவரம் மீனவர்கள் புத்தாண்டையொட்டி விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் 43 மீனவர்களுக்கு மீண்டும் காவல் நீட்டிப்பு செய்து, சிறையில் அடைத்தது அவர்களது குடும்பத்தினரை மிகுந்த கவலை அடையச் செய்துள்ளது.

மேலும் செய்திகள்