மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற தந்தை மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Update: 2021-12-31 20:32 GMT
ஜெயங்கெண்டம்:

போக்சோவில் கைது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியான 16 வயது சிறுமி, நேற்று முன்தினம் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது தந்தை தன்னையும், தனது தங்கையையும் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததாகவும், இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இது குறித்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமிகளின் தந்தை அவர்களுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றது உறுதியானது. இதையடுத்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக சிறுமியின் அத்தைகள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குண்டர் சட்டம் பாய்ந்தது
பெற்ற மகள்களிடம் தந்தையே தவறாக நடக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இது குறித்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ் கான் அப்துல்லா பரிந்துரையின்பேரில் அரியலூர் மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சிறுமியின் தந்தை மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேலும் செய்திகள்