மண்டபத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் விடுதலை

இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 12 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2022-01-05 18:50 GMT
பனைக்குளம்
இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 12 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.
மீனவர்கள் விடுதலை
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து கடந்த மாதம் 20-ந் தேதி 2 விசைப்படகுகளில் 12 மீனவர்கள் தென்கடலான மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். அவர்களது படகுகளை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தை சேர்ந்த 12 மீனவர்களும் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, 12 மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். 
படகுகள் விடுவிக்கப்படவில்லை
மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையிலும் அவர்களின் 2 படகுகளை விடுவிப்பது குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இதனால் மீனவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் ஜெகதாப்பட்டினம், ராமேசுவரத்தை சேர்ந்த 56 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களும் விரைவில் விடுவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்