திருவெண்ணெய்நல்லூர் அருகே அடுத்தடுத்து சம்பவம்: 2 தொழிலாளிகள் வீட்டில் திருட்டு
திருவெண்ணெய்நல்லூர் அருகே 2 தொழிலாளிகள் வீட்டில் திருடு போனது.
அரசூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள மாதம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் ஜானகிராமன் (வயது 46). இவர் ஈரோட்டில் ஒரு செங்கல் சூளையில் செங்கல் அறுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இதேபோல் இவரது வீட்டுக்கு அருகே உள்ள வீட்டில் வசிப்பவர் வரபிரகாசம் மகன் ஆகாஷ் (23). இவர் பெங்களூருக்கு கூலி வேலைக்கு சென்று விட்டார்.
நேற்று முன்தினம் இரவு, மாதம்பட்டில் உள்ள ஜானகிராமன், ஆகாஷ் ஆகியோரின் வீடுகளின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம மனிதனர்கள், பீரோவில் இருந்த நகை பணத்தை திருடி சென்றுவிட்டனர்.
ஜானகிராமன் வீட்டின் பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் நகை, ரூ. 20 ஆயிரத்தையும், ஆகாஷ் வீட்டில் இருந்த பித்தளை பொருட்கள் மற்றும் மேலும் சில பொருட்களையும் திருடிச் சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.