தந்தை-மகனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

பெரியகுளம் தாலுகாவில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்த வழக்கில் தந்தை-மகனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-01-12 17:13 GMT
தேனி: 

பெரியகுளம் தாலுகாவுக்கு வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம், கெங்குவார்பட்டி ஆகிய பகுதிகளில் மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலத்தை, அதிகாரிகள் துணையுடன் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் மற்றும் தனிநபர்கள் சிலர் அபகரித்ததாக புகார்கள் எழுந்தன. 

இதுதொடர்பாக பெரியகுளம் முன்னாள் ஆர்.டி.ஓ.க்கள் ஆனந்தி, ஜெயப்பிரிதா உள்பட 14 பேர் மீது தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ், நில அளவையர் பிச்சைமணி ஆகிய 2 பேரிடம் நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். 

முதற்கட்ட விசாரணை நடத்தியதை தொடர்ந்து அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தாமரைக்குளத்தில் அரசு நிலம் அபகரிக்கப்பட்டது தொடர்பாக பெரியகுளத்தை சேர்ந்த முத்துவேல் பாண்டியன் என்பவர் தனது தந்தை முத்துராஜூடன் தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். இதில் முத்துவேல் பாண்டியன் தாமரைக்குளத்தில் அரசு நிலத்திற்கு பட்டா பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக அவர்கள் இருவரிடமும் போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்பு அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர். இது முதற்கட்ட விசாரணை தான் என்றும், மீண்டும் அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்