வீடு புகுந்து நகை, பணம் திருடிய வாலிபர். பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

வீடு புகுந்து நகை, பணம் திருடிய வாலிபர்

Update: 2022-01-12 17:54 GMT
ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த நாச்சார்குப்பம் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜலகண்டன் (வயது 48), கூலித்தொழிலாளி. நேற்று அதிகாலை 5 மணியளவில் மர்மநபர், ஜலகண்டனின் வீட்டின் பின்பக்கமாக நுழைந்து, பீரோவை திறந்து பொருட்களை திருடி உள்ளார். சத்தம் கேட்டு ஜலகண்டன் திடுக்கிட்டு எழுந்ததைப் பார்த்ததும் மர்மநபர் வீட்டில் இருந்து வெளியே தப்பியோடினார். 

அதிர்ச்சி அடைந்த ஜலகண்டன் திருடன்.. திருடன்.. என கூச்சலிட்ட படி மர்மநபரை பின்தொடர்ந்து விரட்டினார். அவரின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினரும் திரண்டு மர்ம நபரை விரட்டிப் பிடித்தனர். 

இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் அதேப் பகுதியைச் சேர்ந்த பரந்தாமன் (வயது 25) என்றும், ஜலகண்டன் வீட்டில் ரூ.20 ஆயிரம், 2 பவுன் நகை, 2 செல்போன்களை திருடியதாக கூறினார். 

இதையடுத்து பரந்தாமனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகை, பணம், செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்