ரெயில்வே கேட்டை அடிக்கடி மூடுவதால் போக்குவரத்து பாதிப்பு

சீர்காழி பனங்காட்டான்குடி சாலையில் உள்ள ரெயில்வே கேட்டை அடிக்கடி மூடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மேம்பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Update: 2022-01-12 18:14 GMT
சீர்காழி:
சீர்காழி பனங்காட்டான்குடி சாலையில் உள்ள ெரயில்வே கேட்டை அடிக்கடி மூடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மேம்பாலம் அமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பனங்கட்டான்குடி சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் கோவில்பத்து, பணமங்கலம், அகணி, தென்னங்குடி, வள்ளுவக்குடி, நிம்மேலி, மருதங்குடி, புங்கனூர், ஆதமங்கலம், பெருமங்கலம், கொண்டல், அகரஎலத்தூர், பனங்காட்டான்குடி மற்றும் சீர்காழி நகர் பகுதியில் இருந்து புறவழிச்சாலை வழியாக சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால் இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும்.
30 நிமிடத்திற்கு ஒருமுறை ெரயில்கள் வந்து செல்வதால் அடிக்கடி இந்த ரெயில்வே கேட் மூடப்படுகிறது. இதன் காரணமாக ஆபத்து நேரங்களில் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு நிலைய வாகனம் உள்ளிட்ட முக்கிய வாகனங்கள் செல்ல வழி இல்லாமல் ரெயில்வே கேட்டு திறக்கும் வரை காத்திருக்க வேண்டியது உள்ளது.  இதனால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்படும் நிலையும் இருந்து வருகிறது.
போக்குவரத்து பாதிப்பு
மேலும் ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட் மூடப்படுவதால்  இருபுறங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் நீண்ட நேரம் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. மேலும் ரெயில்வே கேட்டை திறக்கும் போது வாகனங்கள் ஒன்றையொன்று முந்திசெல்லும் போது விபத்துக்கள் ஏற்படுகின்றன.
எனவே அரசு பனங்காட்டான்குடி சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் செய்திகள்