முன்னாள் ராணுவ வீரர் பலி; காப்பாற்ற முயன்ற மனைவியும் சாவு

லால்குடி அருகே வழுக்கி விழுந்து முன்னாள் ராணுவ வீரர் பலியானார். காப்பாற்ற முயன்ற மனைவியும் இறந்தார்.

Update: 2022-01-12 19:07 GMT
லால்குடி,ஜன.13-
லால்குடி அருகே  வழுக்கி விழுந்து முன்னாள் ராணுவ வீரர் பலியானார். காப்பாற்ற முயன்ற மனைவியும் இறந்தார்.
முன்னாள் ராணுவ வீரர்
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 75). முன்னாள் ராணுவ வீரரான இவர் நேற்று முன்தினம் இரவு கழிவறைக்கு சென்றார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக அவர் வழுக்கி கீழே விழுந்தார். இந்தநிலையில் அருகே நின்று இருந்த அவரது மனைவி அன்னபூரணி (65) ஓடிச்சென்று கணவரை  பிடிக்க முயன்றார். இதனிடையே அவரும் தவறி விழுந்தார். இதில் இருவரது தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
தம்பதி பலி
இதனையடுத்து மற்றொரு அறையில் இருந்த அவர்களது மகன்கள் ராஜேந்திரன் (50), ராமச்சந்திரன் இருவரும் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்தனர். தாயும், தந்தையும் விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் பெற்றோரை லால்குடி அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர், இருவரும் இறந்து விட்டனர் என தெரிவித்தார்.
லால்குடி அருகே கணவன்-மனைவி இருவரும் ஒரே நேரத்தில் வழுக்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்