பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திட்டக்குடி அருகே பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-13 16:49 GMT
திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே கொடிக்களம் பள்ளக்காவேரி தெருவில் உள்ள ரேஷன் கடையில் 300-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர். இந்த கடையில் 90 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு முழுமையாக வழங்கப்பட்டதாக தெரிகிறது. மீதமுள்ளவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அருகே திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இது குறித்த தகவலின் பேரில்  திட்டக்குடி துணை  போலீஸ் சூப்பிரண்டு சிவா மற்றும் வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அப்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் மஞ்சள், உப்பு, பை ஆகியவை இல்லை. எனவே எங்களுக்கு முறையாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என கூறினர். அதற்கு அதிகாரிகள் பொங்கல் பரிசு தொகுப்பு முழுமையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடம் போக்கு        வரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்