இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய குமரி தொழில் அதிபர் கைது

தவறாக நடக்க முயன்ற வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய குமரி தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-13 19:04 GMT
நாகர்கோவில்,
தவறாக நடக்க முயன்ற வீடியோக்களை சமூக வலைத்தளங்களில்  பரப்பி இளம்பெண்ணின் திருமணத்தை நிறுத்திய குமரி தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர். 
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-
திருமணத்தை நிறுத்தினார்
குமரி மாவட்டம் வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் அனில்குமார் (வயது 39). இவர் பெங்களூருவில் குளிர்சாதன எந்திரம் உள்ளிட்ட பொருட்களுக்கான சர்வீஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். திருமணமான இவர் தனது நிறுவனத்தில் பணியாற்றி வந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அந்த இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். மேலும் அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார்.
திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளாததால் ஏற்கனவே எடுத்து வைத்திருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பரப்பியதோடு, ஆசிட் வீசி கொன்று விடுவதாகவும் கொலை மிரட்டல் விடுத்து அந்த இளம்பெண்ணுக்கு நடக்க இருந்த திருமணத்தையும் நிறுத்தியுள்ளார்.
சிறையில் அடைப்பு
இதுகுறித்து இளம்பெண் மாவட்ட போலீஸ்  சூப்பிரண்டு பத்ரிநாராயணனிடம் புகார் மனு கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். 
அந்த உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தி, சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிப் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து தலைமறைவாக இருந்த அனில்குமாரை போலீசார் கைது செய்து நேற்று இரணியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்