பொங்கல் சீர்வரிசை வழங்கியதில் தகராறு: புதுமாப்பிள்ளையை வெட்டிக்கொன்ற மாமனார் கடையநல்லூர் அருகே பயங்கரம்

கடையநல்லூர் அருகே பொங்கல் சீர்வரிசை வழங்கியதில் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளையை மாமனார் வெட்டிக்கொலை செய்தார்.

Update: 2022-01-13 19:46 GMT
அச்சன்புதூர்:

காதல் திருமணம் 
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியை சேர்ந்தவர் ராஜூ மகன் சரத்குமார் (வயது 27), மெக்கானிக்.
இவரும், கடையநல்லூர் அருகே உள்ள மேலகடையநல்லூரை சேர்ந்த கண்ணன் மகள் கற்பூரஜோதி (23) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் இவர்களது திருமணம் நடந்தது.

தகராறு 
இந்த நிலையில் நேற்று கற்பூரஜோதியின் தாயார் தனது மகள் வீட்டுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்கள் கொண்டு சென்று கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டார்.
அந்த சீர்வரிசை பொருட்களை பார்த்த புதுமாப்பிள்ளை சரத்குமார், இவற்றை ஏன் இங்கு கொண்டு வந்தார்கள்? என்று கூறி மனைவி கற்பூரஜோதியிடம் தகராறு செய்தார். வாக்குவாதம் முற்றவே கற்பூரஜோதி பக்கத்து வீட்டுக்கு சென்று விட்டார். 

வெட்டிக்கொலை
ஆனால், கற்பூரஜோதியை அவரது தாயார் அழைத்து சென்று விட்டதாக கருதி, சரத்குமார் மேல கடையநல்லூரில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று தகராறு செய்தார். அப்போது அவருக்கும், மாமனார் கண்ணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் அரிவாளால் சரத்குமாரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சரத்குமார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

போலீசில் சரண்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த சரத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கண்ணன் கடையநல்லூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரபரப்பு
பொங்கல் சீர்வரிசை வழங்கியதில் ஏற்பட்ட தகராறில் புதுமாப்பிள்ளையை மாமனாரே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

மேலும் செய்திகள்