காரில் சாராயம் கடத்திய 3 பேர் கைது

காரில் சாராயம் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2022-01-13 20:29 GMT
திருச்சி
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை காளஹஸ்திநாதபுரம் மாத்தூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் 1,500 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே காரில் வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், மண்ணம்பந்தல் செங்கமேட்டு தெருவை சேர்ந்த சதிஷ் மகன் குமார் மற்றும் மயிலாடுதுறை கீழ நாஞ்சில்நாடு தோப்பு தெருவை சேர்ந்த பரமசிவம் மகன் ராஜூ என்பதும், கடத்தலுக்கு உதவியாக இருசக்கர வாகனத்தில் காரை பின் தொடர்ந்து திருக்களாச்சேரி தெற்கு தெருவை சேர்ந்த செந்தில் மகன் முருகேசன் வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், 2 வாகனங்களையும், சாராயத்தையும் பறிமுதல் செய்தனர். தொடர் விசாரணையில், மயிலாடுதுறை முளப்பாக்கத்தை சேர்ந்த மணி மகன் அழகர் மற்றும் தூக்கணாங்குளத்தை சேர்ந்த பிரபு ஆகியோருக்கு காரைக்காலில் இருந்து சாராயம் எடுத்து வந்தது தெரிய வந்ததால் அழகரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய பிரபுவை போலீசார் தேடி வருகின்றனர். இதுபற்றி அறிந்த மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. பாலகிருஷ்ணன், சாராயம் கடத்தியவர்களை கைது செய்த போலீசாரை  பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

மேலும் செய்திகள்