தடையை மீறி குண்டம் இறங்க வந்த இந்து முன்னணியினர் 30 பேர் கைது

தடையை மீறி குண்டம் இறங்க வந்த இந்து முன்னணி அமைப்பினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-13 21:03 GMT
கடத்தூர்
தடையை மீறி குண்டம் இறங்க வந்த இந்து முன்னணி அமைப்பினர் 30 பேரை போலீசார் கைது செய்தனர். 
குண்டம் விழா
கோபி அருகே பாரியூரில் கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் விழா கடந்த 30-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 
கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்க அனுமதி அளிக்கப்பட்டது. பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதி அளிக்கவில்லை. 
கைது 
இதற்கிடையே உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும், இல்லை என்றால் தடையை மீறி குண்டம் இறங்குவோம் என்றும் இந்து முன்னணி அமைப்பினர் அறிவித்திருந்தனர். மேலும் கோவில் பூச்சாட்டுதலின்போதே அவர்கள் காப்பு கட்டி விரதம் இருக்க தொடங்கினர்.
இந்த நிலையில் தடையை மீறி குண்டம் இறங்குவதற்காக 30-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கோவிலுக்கு நேற்று வந்தனர். ஆனால் கோவில் பகுதிக்குள் நுழைய போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்து முன்னணியை சேர்ந்த 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 

மேலும் செய்திகள்