பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுகொலை

திருப்புவனம் அருகே பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுெகாலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-01-16 17:59 GMT
திருப்புவனம், 

திருப்புவனம் அருகே பொங்கல் விழாவில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுெகாலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொங்கல் விழா

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள இலந்தைகுளம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் நேற்று முன்தினம் கருப்பசாமி(வயது 28) என்பவர் உறவினர்களுடன் பொங்கல் வைத்து விழா கொண்டாடினார்.
அப்போது அங்கு வந்த ஊராட்சி துணைத்தலைவர் ரவி, என்னை கேட்காமல் ஏன் பொங்கல் வைத்தீர்கள் என கேட்டுள்ளார். இதில் ரவிக்கும், கருப்பசாமிக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ரவியின் மகன்கள் சிவா (26), சிவானந்தம் (24), ராஜ்குமார் (21), இவர்களது உறவினர்கள் சரத்குமார் (20), கண்ணன் (19) ஆகியோர் கருப்பசாமியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது அங்குள்ள பொதுமக்கள் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

வாலிபர் படுகொலை

பின்னர் கருப்பசாமி, நண்பர் அருண்குமாருடன் அன்று இரவு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு செல்லும் வழியில், இருவரையும் சிவா, சிவானந்தம், ராஜ்குமார், சரத்குமார், கண்ணன் ஆகியோர் வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் கருப்பசாமி குடல் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த அருண்குமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 
இதுகுறித்து கருப்பசாமியின் தாயார் புஷ்பம் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீராளன் வழக்குப்பதிவு செய்து சிவா, சிவானந்தம், ராஜ்குமார், சரத்குமார், கண்ணன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
 பொங்கல் திருநாளில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்