மேற்கு வங்க பட்டதாரி இளைஞர் சைக்கிள் பயணம்

இயற்கை வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி மேற்கு வங்க பட்டதாரி இளைஞர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

Update: 2022-01-17 20:48 GMT
விருதுநகர், 
மேற்கு வங்க மாநிலம் லால்கோலா மாவட்டத்தை சேர்ந்தவர் லால்சங்கிதாஸ் என்ற ஜோஜோ குமார் (வயது23). பட்டதாரியான இந்த இளைஞர் பலசரக்குக்கடை நடத்திவரும் தன் தந்தையின் அறிவுறுத்தலின்பேரில் இயற்கை வளத்தை பேணி காப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சைக்கிள் பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் தனது சொந்த ஊரில் இருந்து பயணத்தை தொடங்கிய இவர் நேற்று விருதுநகர் வருகை தந்தார். இதுவரை 19 மாநிலங்களில் 9 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் பயணம் செய்துள்ள இவர் வருகிற ஏப்ரல் மாதம் தன் சொந்த ஊர் சென்றடைய திட்டமிட்டுள்ளார். ஊர் திரும்பும் போது சுமார் 16 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்ய வாய்ப்புள்ளது என்றும் அவர் தெரிவித்தார். செல்லுமிடங்களில் பொதுமக்களிடம் இயற்கை வளத்தை பேணிப் பாதுகாப்பது குறித்தும் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றும் வலியுறுத்துவதுடன் வாழ்நாளில் இரண்டு முறையாவது ரத்ததானம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். தன் சொந்த செலவிலேயே பயணம்மேற்கொண்டுள்ள இவர் பொதுமக்கள் தரும் பொருள் உதவியை வழியில் உணவருந்த பயன்படுத்திக் கொள்வதாக தெரிவித்தார். விருதுநகர் வந்த அவரை இளைஞர்கள் பலர் வரவேற்று உற்சாகப்படுத்தினர்.

மேலும் செய்திகள்