கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை; உதவி கலெக்டர் விசாரணை

ஏர்வாடி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2022-01-18 19:25 GMT
ஏர்வாடி:
ஏர்வாடி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார். 

3 மாத கர்ப்பிணி
நெல்ைல மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர். இவரது மகள் இளவரசி (வயது 27). இவருக்கும், அவரது உறவினரான ராமையன்பட்டி அருகே உள்ள ராஜகோபாலபுரத்தை சேர்ந்த சுடலைமணி மகன் மாரித்துரைக்கும் கடந்த 5.12.2016 அன்று திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் மாலினி என்ற மகள் உள்ளார். தற்போது இளவரசி 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். 
மாரித்துரைக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மது அருந்தி விட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். மேலும் அக்கம்பக்கத்தில் கடன் வாங்கி செலவு செய்தார். இதுதொடர்பாக அவருக்கும், மனைவி இளவரசிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

தற்கொலை
இதையடுத்து இளவரசி தனது மகளுடன் சிறுமளஞ்சியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி சிறுமளஞ்சிக்கு வந்த மாரித்துரை, இளவரசியை சந்தித்து சமாதானம் செய்தார். மீண்டும் வந்து தன்னுடன் அழைத்து செல்வதாக கூறி விட்டு சென்றார். 
இந்த நிலையில் சம்பவத்தன்று இளவரசி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

உதவி கலெக்டர் விசாரணை
இதுகுறித்து அவரது சகோதரர் சேதுராமலிங்கம் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளவரசிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால், நெல்லை உதவி கலெக்டர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்