போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 275 வாகன ஓட்டிகளுக்கு ரூ.7¾ லட்சம் அபராதம்

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 275 வாகன ஓட்டிகளுக்கு ரூ.7¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-01-19 14:58 GMT
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 275 வாகன ஓட்டிகளுக்கு ரூ.7¾ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
5 குழுக்கள் அமைப்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீதும், விதிகளை மீறி இயக்கப்படும் சரக்கு மற்றும் இதர வாகனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, ஈரோடு சரக துணை போக்குவரத்து ஆணையாளர் ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின்பேரில், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பதுவை நாதன் (ஈரோடு மேற்கு), வெங்கட் ரமணி (ஈரோடு கிழக்கு), சக்திவேல் (பெருந்துறை), முனுசாமி (கோபி) ஆகியோர் தலைமையில் 5-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டது.
ரூ.7¾ லட்சம் அபராதம்
இந்த குழுவினர் கடந்த 12-ந்தேதி முதல் நேற்று வரை ஈரோடு சரகத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். இதில், 198 ஆம்னி பஸ்களில் சோதனை செய்ததில் 27 ஆம்னி பஸ்கள் விதிகளை மீறி இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரூ.59 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.52 ஆயிரம் உடனடியாக வசூலிக்கப்பட்டது.
இதேபோல், சரக்கு வாகனங்கள் மற்றும் பிற வாகனங்கள் என 1,153 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில், விதிகளை பின்பற்றாமல் இயக்கியதாக 275 வாகனங்களுக்கு இணக்க கட்டணம் மற்றும் வாகன வரியாக ரூ.7 லட்சத்து 88 ஆயிரத்து 175 விதிக்கப்பட்டது. அதில், ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்து 503 உடனடியாக வசூலிக்கப்பட்டது. மேலும், தகுதி சான்று, வரி செலுத்தாத 7 சரக்கு வாகனங்கள் உட்பட 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்