ஈரோட்டில் கார் திருடர்கள் 2 பேர் கைது

ஈரோட்டில் வாகன சோதனையின் போது கார் திருடர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-20 17:31 GMT
ஈரோட்டில் வாகன சோதனையின் போது கார் திருடர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாகன சோதனை
ஈரோடு தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு ஈரோடு சென்னிமலை ரோட்டில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் காரில் இருந்த 2 வாலிபர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
2 பேர் கைது
விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள எக்கூர் காந்தி நகரை சேர்ந்த பூவரசன் (வயது 26), மகனூர் பட்டு, மொசிலிகுட்டை கிராமத்தை சேர்ந்த அரவிந்த் (22) ஆகியோர் என்பதும், இவர்கள் ஓட்டி வந்த கார் திருடிய கார் என்பதையும் ஒப்புக்கொண்டனர். 
ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரை இவர்கள் திருடி சென்றதும், அந்த காரில் வந்த போதுதான் போலீசார் வாகன சோதனையில் சிக்கி கொண்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் வழிப்பறி செய்த ஒரு பவுன் மோதிரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 
இதில் அரவிந்த் மீது ஏற்கனவே திருப்பதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய வழக்கு உள்ளது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.  இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பூவரசன், அரவிந்த் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்