கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு வந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள்

கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு வந்து இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளாயினர்.

Update: 2022-01-20 17:44 GMT
கிருஷ்ணகிரி:-
கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் பரிசோதனைக்கு வந்து இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்களை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளாயினர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11, 12-ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கான உடல் பரிசோதனை நேற்று கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரியில் நடந்தது. இந்த பரிசோதனைக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 40-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் தங்கள் விண்ணப்பங்களை ஆசிரியர்கள் உதவியுடன் பரிசோதனைக்கு கொண்டு வந்தனர்.
அவர்களை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு அனுப்புவது வழக்கம். ஆனால் நேற்று காலை 9 மணிக்கு வந்த மாணவர்களை மருத்துவமனை ஊழியர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் மாணவர்கள் அமர்வதற்கு இடம் கூட ஒதுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
பரபரப்பு
சுமார் 3 மணி நேரத்திற்கு பின் அங்கு வந்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் அவர்களது விண்ணப்பங்களை பெற்றனர். அதன்பிறகு, மருத்துவக்குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் உடல் பரிசோதனை அறிக்கையை தர மாலை வரை காத்திருங்கள் எனவும் கூறி சென்றதால் மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தின் நடைபாதை பகுதியிலேயே காத்து கிடந்தனர்.
கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் மாணவர்களுக்கு உடல் பரிசோதனை மேற்கொள்ளாமல் மருத்துவமனை வளாகத்திலேயே நீண்ட நேரம் அமர வைத்த நிகழ்வு அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்