டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஆட்டோ டிரைவர் பலி

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.

Update: 2022-01-21 22:37 GMT
மங்களமேடு:

ஆட்டோ டிரைவர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சின்னவெண்மணி காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 38). இவருக்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். சுரேஷ்குமார் சென்னையில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு தீபா தனது தாய் வீடு உள்ள பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே புதுவேட்டகுடி கிராமத்திற்கு வந்தார். தனது மனைவியை அழைத்து வருவதற்காக நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் புதுவேட்டகுடி கிராமத்திற்கு சுரேஷ்குமார் சென்றார்.
சாவு
அப்போது நல்லறிக்கை அருகே கரும்பு லோடு ஏற்றப்பட்ட டிராக்டர் பழுது காரணமாக சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த டிராக்டரின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியதில் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே சுரேஷ்குமார் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது அவர்கள், டிராக்டரில் பழுது ஏற்பட்டதற்கான அறிகுறி எதுவும் இல்லை, சம்பவ இடத்தில் யாரும் இல்லை, டிராக்டரில் சமிஞ்கை விளக்குகள் எரியவில்லை, எனவே டிராக்டர் டிரைவரின் கவனக்குறைவால்தான் விபத்து ஏற்பட்டது என்று கூறி அரியலூர் திட்டக்குடி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், டிராக்டர் டிரைவரை கைது செய்வதாக உறுதி அளித்தன்பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து சுரேஷ்குமாரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்