பெண் வார்டன் வீட்டுக்கதவை தட்டிய சேலம் சிறை தலைமை வார்டன் பணி இடைநீக்கம்-சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் உத்தரவு

பெண் வார்டன் வீட்டுக்கதவை தட்டிய சேலம் சிறை தலைமை வார்டனை பணி இடைநீக்கம் செய்து சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் உத்தரவிட்டார்.

Update: 2022-01-21 22:57 GMT
சேலம்:
பெண் வார்டன் வீட்டுக்கதவை தட்டிய சேலம் சிறை தலைமை வார்டனை பணி இடைநீக்கம் செய்து சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் உத்தரவிட்டார்.
சேலம் மத்திய சிறை
மதுரையை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 44). கடந்த 2 வருடமாக சேலம் மத்திய சிறையில் தலைமை வார்டனாக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் சேலம் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள சிறைக்காவலர்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். அதே குடியிருப்பில் பெண் வார்டன் ஒருவர் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி நள்ளிரவு பாண்டியராஜன், பெண் வார்டன் வீட்டின் கதவை தட்டி உள்ளார். கதவை திறந்து பார்த்த போது வீட்டின் வாசல் முன்பு பாண்டியராஜன் நின்று கொண்டிருந்தார்.
பணி இடை நீக்கம்
இதுகுறித்து அவர் சிறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அதிகாரிகள் வந்து பார்த்தபோது பாண்டியராஜன் நின்று கொண்டிருந்தது தெரிந்தது. இதுகுறித்து சிறை அதிகாரிகள், கோவை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரத்திற்கு தகவல் கொடுத்தனர். உரிய விசாரணை நடத்துமாறு அவர் சேலம் சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமாருக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து பெண் சிறை வார்டன் மற்றும் சிறை அதிகாரிகளிடம் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். இந்தநிலையில் தலைமை வார்டன் பாண்டியராஜனை, பணி இடைநீக்கம் செய்து சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்