‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-01-22 17:25 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குவிந்து கிடக்கும் குப்பைகள்
வத்தலக்குண்டு பேரூராட்சி காந்திநகர் பிரதான சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் சாலை முழுவதும் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. அவற்றை அள்ளிச்செல்லவும் துப்புரவு பணியாளர்கள் யாரும் வருவதில்லை. இதனால் அந்த தெருவே குப்பை கிடங்கு போல் மாறி வருகிறது. எனவே குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, வத்தலக்குண்டு.
சேதமடைந்த மின்கம்பம்
திண்டுக்கல்லை அடுத்த செங்குறிச்சி அருகே உள்ள குரும்பபட்டி அரண்மனை தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-யுவபிரகாஷ், செங்குறிச்சி.
தார்சாலை அமைக்கப்படுமா?
ஒட்டன்சத்திரம் தாலுகா இடையகோட்டையை அடுத்த கல்லுப்பட்டியில் இதுவரை தார்சாலை அமைக்கப்படவில்லை. மண்பாதையாகவே உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே கல்லுப்பட்டியில் தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-அஜய்குமார், கல்லுப்பட்டி.
குப்பை கிடங்கு வேண்டும்
ஆத்தூர் தாலுகா வீரக்கல் ஊராட்சி வீ.கூத்தம்பட்டியில் குப்பை கிடங்கு வசதி இல்லை. இதனால் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை சேகரித்து வைக்க வீ.கூத்தம்பட்டியில் குப்பை கிடங்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராமு, வீ.கூத்தம்பட்டி.

மேலும் செய்திகள்