மனைவி பிரிந்து சென்றதால் கோவில் குளத்தில் குதித்து தொழிலாளி தற்கொலை

மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-01-25 15:39 GMT
குளத்தில் பிணம்

திருவள்ளூரில் வீரராகவ பெருமாள் கோவிலை ஒட்டி குளம் ஒன்று உள்ளது. இதில் நேற்று வாலிபர் ஒருவரின் உடல் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்த கோவில் நிர்வாகத்தினர் திருவள்ளூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த திருவள்ளூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

குடும்ப தகராறு

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் கோவில் குளத்தில் பிணமாக கிடந்தவர் திருவள்ளூர் வீரா நகர் தகனிக்கோட்டை தெருவில் வசித்து வந்த யுவராஜ் (வயது 32) என்பது தெரியவந்தது. அவர் திருவள்ளூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி நித்தியா என்கின்ற மனைவியும், 9 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் குடிப்பழக்கம் கொண்ட அவர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது 8 வருடங்களுக்கு முன்பு அவரது மனைவி தன் மகனுடன் தனியாக சென்றுவிட்டார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த அவர் கோவில் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீ்ஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசார் இது சம்பந்தமாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் செய்திகள்