வாணியம்பாடி அருகே நண்பருடன் சென்ற மெக்கானிக் மர்மச்சாவு

வாணியம்பாடி அருகே நண்பருடன் சென்ற மெக்கானிக் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-01-25 17:12 GMT
வாணியம்பாடி

வாணியம்பாடி அருகே நண்பருடன் சென்ற மெக்கானிக் மர்மமான முறையில் இறந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனப்பகுதிக்கு சென்றனர்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் சுந்தர். இவரிடம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த யுவராஜ் (வயது 30) மற்றும் கணவாய் புதூர் பகுதியை சேர்ந்த திருமலை ஆகியோர் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தனர். இருவரும் நண்பர்கள் என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை திருமலை மற்றும் யுவராஜ் ஆகியோர் தமிழக- ஆந்திர எல்லை பகுதியில் உள்ள புல்லூர் தடுப்பணைக்கு சென்று அங்கு இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு வனப்பகுதிக்குள் சென்றுள்ளனர்.

பின்னர் இரவு நேரமானதால் திருமலை மட்டும் அங்கிருந்து  வீட்டுக்கு வந்துள்ளார். நீண்ட நேரம் ஆகியும் யுவராஜ் வீடு திரும்பவில்லை. இதனால் யுவராஜை, அவருடைய தந்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது நண்பரான திருமலையை தொடர்பு கொண்டு கேட்டபோது இருவரும் தடுப்பணை அருகே சென்றோம், ஆனால் நான் வந்து விட்டேன் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மர்மச்சாவு

அதைத்தொடர்ந்து யுவராஜின் தந்தை கோபால் ஆந்திர மாநிலம் குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் புல்லூர் தடுப்பணை அருகே உள்ள வனப்பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. உடனே குப்பம் போலீசார் சென்று பார்த்தபோது இறந்து கிடந்தது யுவராஜ் என்பது தெரியவந்தது.

அவருடைய உடலில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டாரா, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்