சுதந்திர போராட்ட வீரர்களின் முகமூடி அணிந்து ஊர்வலம்
கம்பத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் முகமூடி அணிந்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஊர்வலம் நடத்தினர்.
கம்பம்:
குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததாக மத்திய அரசை கண்டித்து, தேனி மாவட்ட ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் முகமூடி அணிந்து ஊர்வலம் நடைபெற்றது.
இதற்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். செயலாளர் முனீஸ்வரன், பொருளாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்டவர்கள், சுதந்திர போராட்ட வீரர்களான வ.உ.சிதம்பரம், பாரதியார், வேலுநாச்சியார், குயிலி, மருது சகோதரர்கள் ஆகியோரின் முகமூடிகளை அணிந்தபடி ஊர்வலம் வந்தனர்.
கம்பம் காந்தி சிலை பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம், வ.உ.சி. திடல், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு வழியாக சென்று பார்க் ரோட்டில் நிறைவடைந்தது. ஊர்வலத்தின்போது மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.