மயிலாடுதுறை நகரில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன

தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் மயிலாடுதுறை நகரில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.

Update: 2022-01-27 18:08 GMT
மயிலாடுதுறை:
தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதால் மயிலாடுதுறை நகரில் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.
தேர்தல் நடத்தை விதிமுறைகள்
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக நேற்று முன்தினம் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கப்பட உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி மயிலாடுதுறை நகரில் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சி டிஜிட்டல் பேனர்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்கள் அனைத்தும் அழிக்கும் பணி நேற்று நடந்தது. அதற்கான பணியை நகர சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைமுத்து, டேவிட் பாஸ்கர், ராமையன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் நகரில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பரங்களை அழித்தனர். 
விளம்பரங்கள் அழிக்கப்பட்டன
முன்னதாக தரங்கம்பாடி சாலையில் அரசு அலுவலக சுவர்கள் மற்றும் தனியார் சுவர்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் அழிக்கப்பட்டன. 
தொடர்ந்து நகரில் பஸ்நிலையங்கள், கூறைநாடு, ெரயிலடி, பூம்புகார் சாலை, சீர்காழி சாலை, கும்பகோணம் சாலை, திருவாரூர் சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுவர்களில் எழுதப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பரங்கள் அழிக்கப்பட்டன.
இந்த பணியினை நகரமைப்பு அலுவலர் ரவிச்சந்திரன், நேதாஜி, நகரமைப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் நகரமைப்பு ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்