மோதலில் ஈடுபட்ட தலைமைஆசிரியர், மாற்றுத்திறனாளி ஆசிரியர் பணியிடை நீக்கம்

கலசபாக்கம் அருகே பள்ளி வளாகத்தில் சட்டையை பிடித்து இழுத்து மோதலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர், மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அதனை வீடியோவில் பதிவிட்ட ஆசிரியர் ஆகியோர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Update: 2022-01-30 12:40 GMT
திருவண்ணாமலை

கலசபாக்கம் அருகே பள்ளி வளாகத்தில் சட்டையை பிடித்து இழுத்து மோதலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர், மாற்றுத்திறனாளி ஆசிரியர் மற்றும் அதனை வீடியோவில் பதிவிட்ட ஆசிரியர் ஆகியோர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

சடடையை இழுத்து மோதல்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகே உள்ள கடலாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவர் அண்ணாமலை. இதே பள்ளியில் மாற்றுத்திறனாளி ஆசிரியர் செழியன் என்பவரும் பணிபுரிந்து வருகிறார். 

கடந்த 27-ந் தேதி இவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் இருவரும் ஒருவரை ஒருவர் சட்டையை பிடித்து தாக்கி கொண்டனர்.

 அவர்களை மற்ற ஆசிரியர்கள் தடுத்து சமாதானம் செய்தனர்.
இதை உடனிருந்த ஆசிரியர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பரவ விட்டு உள்ளார். அந்த வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

விசாரணைக்கு உத்தரவு

இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் மோதல் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க போளூர் கல்வி மாவட்ட அதிகாரிக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நடத்திய விசாரணையில் தலைமை ஆசிரியர், மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஆகியோர் மோதலை வீடியோவில் பதிவிட்டவர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் என்பது தெரியவந்தது.

இது தொடர்பான விரிவான அறிக்கையை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் போளூர் கல்வி மாவட்ட அதிகாரி ஒப்படைத்தார். 

இதனையடுத்து விசாரணை அறிக்கையின் அடிப்படையில் மோதலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் அண்ணாமலை, மாற்றுத் திறனாளி ஆசிரியர் செழியன் மற்றும் இவர்களது மோதலை  வீடியோவில் பதிவிட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் ரமேஷ் ஆகிேயாரை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வம் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்