சங்கரன்கோவில் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலி

மோட்டார்சைக்கிள் மீது கார் மோதல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலியானார்

Update: 2022-01-30 22:14 GMT
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பலியானார். இந்தநிலையில், அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னாள் பஞ்சாயத்து தலைவர்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காளை பாண்டியன். தி.மு.க. பிரமுகரான இவர், 2 முறை பெருங்கோட்டூர் பஞ்சாயத்து தலைவராக இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மோட்டார் சைக்கிளில் சங்கரன்கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே விருதுநகர் மாவட்டம் கட்டநார்பட்டியைச் சேர்ந்த இன்பராஜ் மகன் எமிலின் ஜெபஸ்டின் என்பவர் ஓட்டி வந்த கார் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த காளை பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காளை பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்ததும் நேற்று அவரது உறவினர்கள், ஆஸ்பத்திரியில் குவிந்தனர்.
பின்னர் காளை பாண்டியன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி திடீரென நெல்லை- சங்கரன்கோவில் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.
தொடர்ந்து காளை பாண்டியன் உடல் பிரேத பரிசோதனையானது வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்