வெளிமாநில தொழில் அதிபர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல்

ஓசூரில் வெளிமாநில தொழில் அதிபர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-01-31 08:31 GMT
ஓசூர்:-
ஓசூரில் வெளிமாநில தொழில் அதிபர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பறக்கும் படை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது. இதனால் தேர்தல் நடத்்தை விதிகள் கடந்த 26-ந் தேதி முதல் அமலில் உள்ளன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க மாவட்டம் முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி 19 மண்டலங்களாக பிரித்து பறக்கும் படை அமைத்துள்ளார். இந்த பறக்கும் படை அதிகாரிகள் ஓசூர் மாநகராட்சி முழுவதும் சோதனை நடத்தி வருகின்றனர்.
ரூ.25 லட்சம்
ஓசூர் மாநகராட்சியில் தர்கா பகுதி முத்துமாரியம்மன் கோவில் அருகில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெனிபர் மற்றும் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையின் போது, கர்நாடக மாநிலம் ஆனேக்கல்லை சேர்ந்த ரோஹித், மித்லேஷ் ஆகிய 2 தொழில் அதிபர்கள் காரில் ரூ.25 லட்சத்தை கொண்டு வந்தனர். இந்த பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்திய போது, உரிய ஆவணம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. 
விசாரணை
மேலும் சூளகிரியில் உள்ள தங்கள் கல்குவாரிக்கு கொண்டு செல்வதற்காக ரூ.25 லட்சத்தை எடுத்து சென்றதும் தெரியவந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் வெளிமாநில தொழில் அதிபர்களிடம் இருந்து ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்