சொகுசு வாகனத்தில் 91 நாடுகள் பயணம்: மாமல்லபுரம் வந்த ஜெர்மன் தம்பதி

படுக்கையறை, சமையல் அறை, குளியல் அறை உள்ளிட்ட சொகுசு வசதிகள் கொண்ட நவீன வாகனத்தில் 91 நாடுகளை சுற்றிவரும் ஜெர்மன் தம்பதியினர், மாமல்லபுரம் சுற்றுலா வந்தனர்.

Update: 2022-02-28 00:27 GMT
சென்னை,

ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் தோல்பன் (வயது 39). இவருடைய மனைவி மிகி (36). இவர்கள் கடந்த 12 வருடமாக இஸ்ரேல், இங்கிலாந்து, நியூசிலாந்து, துபாய் உள்ளிட்ட 91 நாடுகளை சுற்றி வந்தனர். தற்போது இந்தியா வந்துள்ளனர்.

இந்த தம்பதியினர் சில வாரங்களுக்கு முன்பு கப்பல் மூலம் தங்களது நவீன வாகனத்துடன் மும்பை துறைமுகம் வந்தனர். அங்கிருந்து மாமல்லபுரம் வந்தனர். மாமல்லபுரம் கடற்கரை கோவில் நுழைவு வாயிலில் வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றுலா சென்றபோது, அங்கு வந்த சுற்றுலா பயணிகள் சொகுசு வாகனத்தை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

நவீன வாகனம்

இந்த நவீன சொகுசு வாகனம் படுக்கை வசதி, சமையல் அறை, குளியலறை உள்ளிட்ட வசதிகளை கொண்டதாகும். மேலும் மலை பிரதேசம், கரடு முரடான பாதைகளில் பயணிக்கும் வகையில் இதன் டயர்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

இந்த வாகனத்தில் சோலார் வசதி பொருத்தப்பட்டு உள்ளதால் அதன் மூலம் மின்சாரம் பெற்று மின்விசிறி, மின் விளக்கு, குளிர் சாதன வசதி, பயன்படுத்தப்படுகிறது. மாமல்லபுரத்தில் சுற்றி பார்த்துவிட்டு, இந்த வாகனத்தில் மேற்கு வங்காளம், ஒடிசா, குஜராத் செல்ல இருப்பதாகவும் ஜெர்மன் தம்பதியினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்