மேலூர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கடத்தி கொலை செய்யப்பட்ட மதுரை மாவட்டம் மேலூர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அரசு ஆஸ்பத்திரி முன்பு நடந்த சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-07 21:17 GMT
மதுரை, 

கடத்தி கொலை செய்யப்பட்ட மதுரை மாவட்டம் மேலூர் சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக அரசு ஆஸ்பத்திரி முன்பு நடந்த சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

சிறுமி கொலையில் 8 பேர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் தும்பைப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த மாதம் வீட்டை விட்டு சென்றார். அதன்பிறகு அவர் மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவரை அதே பகுதியை சேர்ந்த நாகூர்ஹனிபா காதலித்து வந்ததும், அவர் நண்பர்கள் உதவியுடன் சிறுமியை கடத்தி, பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றதும் தெரியவந்தது. 
இந்த நிலையில் சிறுமியை போலீசார் தேடி வருவதை அறிந்ததும், எலி மருந்தை சிறுமியிடம் கொடுத்து சாப்பிட வைத்துள்ளனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக கொலை மற்றும் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகூர்ஹனிபா, அவரது நண்பர்கள் பிரகாஷ், பெருமாள் கிருஷ்ணன், சாகுல்ஹமீது மற்றும் நாகூர்ஹனிபாவின் தாயார் மதினா, தந்தை சுல்தான் அலாவுதீன், சகோதரர் ராஜாமுகமது, ரம்ஜான்பேகம் ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் நேற்று காலை சிறுமியின் உடலை கோட்டாட்சியர் முன்னிலையில் டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். இதனால் மதுரை மருத்துவமனை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். 
இந்த நிலையில் இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜ.க.வினர் அங்கு திரண்டனர். கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும். சிறுமியின் குடும்பத்துக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். சிறுமி கடத்தலுக்கு உதவிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலையில் தொடர்புடையவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரையில் சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மதுரை அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

உடல் ஒப்படைப்பு

பின்னர் சிறுமியின் உடலானது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை ஆம்புலன்ஸ் மூலமாக பலத்த பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது. 

மேலும் செய்திகள்