சென்னை விமான நிலையத்தில் பிடித்தனர்: பெங்களூரு தொழிலதிபரிடம் மோசடி செய்தவர் சிக்கினார்
பெங்களூரு தொழிலதிபரிடம் மோசடி செய்தவரை சென்னை விமான நிலையத்தில் வைத்த போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் சென்னை வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கோவையைச் சேர்ந்த பெரோஸ்கான் (41) என்பவரது ஆவணத்தை ஆய்வு செய்தனர்.
அதில் பெரோஸ்கான் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரிடம் தொழில் ரீதியாக பரிவர்த்தனை செய்யும் போது பணம் மோசடி செய்து விட்டதாகவும், இதுகுறித்து பெங்களூரு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஓராண்டாக பெரோஸ்கானை தேடி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்து வைத்து பெங்களூரு மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து, பெங்களூரு மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சென்னை விமான நிலையம் வந்து பெரோஸ்கானை கைது செய்து அழைத்து செல்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.