கம்பத்தில் ஏறி மின்கம்பியை பிடித்து உயிரை மாய்த்த தொழிலாளி
மனைவி கொடுத்த புகார் குறித்து விசாரிக்க போலீசார் அழைத்ததால் மனவேதனை அடைந்த தொழிலாளி மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை பிடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
ஓட்டப்பிடாரம்:
மனைவி கொடுத்த புகார் குறித்து விசாரிக்க போலீசார் அழைத்ததால் மனவேதனை அடைந்த தொழிலாளி மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை பிடித்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
ஓட்டப்பிடாரம் அருகே நடந்த இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
வெல்டிங் தொழிலாளி
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குதிரைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பையா மகன் ராஜபாண்டி (வயது 30). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும், கோவில்பட்டி அருகே உள்ள தோட்டிலோவன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் மாரியம்மாள் (25) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. திருமணத்துக்கு பின்பு ராஜபாண்டி வெளிநாட்டில் வெல்டிங் வேலை செய்து வந்தார்.
மனைவி புகார்
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார். இங்கு கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 23-ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதுகுறித்து மாரியம்மாள் தனது கணவர் மீது கடம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். பின்னர் அவர் தனது பெற்ேறார் ஊருக்கு சென்று விட்டார்.
மின்கம்பியை பிடித்து...
இதையடுத்து ராஜபாண்டியை நேற்று காலையில் மனைவி புகார் குறித்து விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் அழைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த ராஜபாண்டி தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி, ஊருக்கு அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்று, அங்குள்ள மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை பிடித்தார். இதில் மின்சாரம் தாக்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் பசுவந்தனை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரகலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது, ராஜபாண்டி இறந்து விட்டது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி கொடுத்த புகார் குறித்து விசாரிக்க போலீசார் அழைத்ததால் மனம் உடைந்த தொழிலாளி மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை பிடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.