பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் கைது

மயிலாடும்பாறை அருகே பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-25 16:07 GMT
கடமலைக்குண்டு:
மயிலாடும்பாறை அருகே உள்ள வனத்தாய்புரத்தை சேர்ந்த பிச்சைமணி மகன் பிரதீப் (வயது 22). இவரும், பிளஸ்-1 மாணவியும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் பிரதீப்பை கண்டித்தனர். இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி இரவு அந்த மாணவி தனது வீட்டைவிட்டு வெளியேறி, காதலன் பிரதீப்புடன் சென்றுவிட்டார். 
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், தங்களது மகளை பிரதீப் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றதாக தெரிவித்திருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீப் மற்றும் மாணவியை தேடி வந்தனர். 
இதற்கிடையே காதலர்கள் 2 பேரும் விருதுநகரில் இருப்பதாக மயிலாடும்பாறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பிரதீப் மற்றும் மாணவியை பிடித்து, மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். 
பின்னர் மாணவியை கடத்தியதாக பிரதீப் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். மேலும் மாணவியை தேனியில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்