சித்தர் போல் வேடம் அணிந்து பணம் மோசடி; தம்பதி உள்பட 4 பேர் கைது

உவரியில் சித்தர் போல் வேடம் அணிந்து பணம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-02 20:34 GMT
திசையன்விளை:
உவரியில் சித்தர் போல் வேடம் அணிந்து பணம் மோசடியில் ஈடுபட்ட தம்பதி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைரேகை ஜோதிடம்

நெல்லை மாவட்டம் உவரி ராஜா தெருவைச் சேர்ந்தவர் செல்வன் (வயது 42). இவருடைய மனைவி சகாயராணி. இவர் கால் வலியால் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி காமராஜர் நகர் அறங்கூர் தொட்டியத்தை சேர்ந்த கலியமூர்த்தி மனைவி சன்னியாசி அம்மாள் (45) என்பவர் திசையன்விளை பகுதிக்கு வந்தார். அவர் கைரேகை ஜோதிடம் பார்ப்பதாக சகாயராணியிடம் தெரிவித்தார். 

அவரிடம் சகாயராணி கால் வலி குறித்து தெரிவித்தார். இதற்கு திருப்பதியில் சித்தர் ஒருவர் உள்ளார். அவர் வந்தால் உங்கள் கால் வலி சரியாகிவிடும் என்று சன்னியாசி அம்மாள் தெரிவித்தார். 

கைது

இதையடுத்து திருச்சி முல்லைநகர் தொட்டியம் அறங்கூர் பகுதியைச் சேர்ந்த பழனியப்பன் மகன் தாமஸ் (30) என்பவர் சித்தர் போல் வேடம் அணிந்து செல்வன் வீட்டிக்கு வந்தார். அவரிடம் உங்கள் மனைவியை குணப்படுத்த ரூ.45 ஆயிரம் செலவாகும் என்று கூறினார். இதற்கு தன்னிடம் ரூ.22 ஆயிரம் மட்டுமே உள்ளது என்று தாமசிடம் கொடுத்தார். பின்னர் தாமஸ் குடிக்க தண்ணீர் கேட்டார்.

செல்வன் வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்து வருவதற்குள், தாமஸ் அங்கு இருந்து தலைமறைவாகிவிட்டார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த செல்வன் இதுகுறித்து உவரி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து, சன்னியாசி அம்மாள், தாமஸ் ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் உவரி அருகே உள்ள காரிகோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் லிங்கராஜா (55) என்பவர் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலையில் ஊரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு வந்த திருச்சி அரங்கூர் ராஜகம்பன் தெருவை சேர்ந்த படாரியப்பன் மனைவி நாகம்மாள் (35) என்பவர் ஜோதிடம் பார்ப்பதாக கூறியுள்ளார். 

தொடர்ந்து நாகம்மாள் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டார். அவர் தண்ணீர் எடுக்க சென்றபோது நடக்க சிரமப்படுவதை பார்த்து எனக்கு கொல்லிமலை சித்தரை தெரியும் அவர் வந்து பார்த்தால் உங்களுக்கு குணமடையும் என்று நாகம்மாள் தெரிவித்தார். இதற்கு லிங்கராஜா சம்மதம் தெரிவித்தார்.

தம்பதி பிடிபட்டனர்

இதையடுத்து படாரியப்பன் கொல்லிமலை சித்தர் போல் வேடம் அணிந்து லிங்கராஜா வீட்டிற்கு வந்தார். அவருடன் நாகம்மாளும் வந்தார். அங்கு லிங்கராஜா காலில் படாரியப்பன் தைலம் தேய்த்தார். மேலும் காலை குணப்படுத்த ரூ.18 ஆயிரம் ஆகும் என்று தெரிவித்தார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று லிங்கராஜா கூறினார். 

அந்த சமயம் படாரியப்பன் குடிக்க தண்ணீர் கேட்டதால், லிங்கராஜா தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது, கடையில் இருந்த ரூ.6 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு படாரியப்பன், நாகம்மாள் ஆகியோர் அங்கு இருந்து சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லிங்கராஜா இதுகுறித்து உவரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, படாரியப்பன், நாகம்மாள் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்